வைணவம்
மத அடையாளங்களில் அதிக நாட்டமில்லை.
திருமண் என்றும் திருநாமம் என்றும் சொல்லப்படும் மேல் நோக்கிய முக்கோடுகள்!
வைணவத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுவது!
பெருமாளின் பாதம் என்றும், வைணவ சூலம் என்றும் சொல்லப்படுகிறது. சங்கு சக்கரம் வெற்றியின் அடையாளமென்று சொல்கிறார்கள்.
நான் சிறுவனாய் இருந்த காலம் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு வழிபாட்டிலும். பொங்கல், தீபாவளி, புரட்டாசி விரதம் மற்ற விசேட நாட்களில் எங்கள் தந்தையார் எங்களுகெல்லாம் நாமம் போட்டு விடுவார்.
(தென்கலை மரபு கொண்டவர்கள்)
நான் கொஞ்சம் வளர்ந்ததும் அந்த பொறுப்பு எனக்கு வந்தது நான் அணிந்துகொண்டு, தம்பிகளுக்கும் திருநாமம் போட்டு விடுவேன்.
நாங்க வளரவளர பலரும் கேலி செய்வதால் அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விட்டோம்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது ஆசிரியர் திரு வரதராசன் அவர்கள் எங்க குடும்ப வழக்கம் தெரிந்து கொண்டு ஏண்டா நாமம் போடுவது இல்லை என்று கேட்டு ஏதோ விளக்கம் சொன்னார் எனக்கு புரியல! ஒருநாள் நானாக நெற்றியில் பெரிய நாமமாக போட்டு பள்ளி சென்று எல்லோருடைய கேலிக்கும் ஆளானேன் பின்னர் ஆசிரியர் சொன்ன அறிவுரைபடி சிகப்பு கோடு ஒன்னு மேல் நோக்கி இழுத்து கொள்வதை நீண்டநாட்கள் செய்து வந்தேன். செந்தூரம் மேல் நோக்கி இட்டுகொள்வதை கடைபிடித்தேன்.
( தற்போது என் நெற்றியில் இயற்கையாகவே மேல்நோக்கிய மூன்று கோடுகளும் அடிக்கோடு ஒன்றும் உருவாகி உள்ளது! தென்கலை நாமம் போல்)
சித்தர் வழிபாடு தியான முறைகள் என மாறிய பின்னர் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டேன் ( பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து ஆழந்து தியானம் செய்ய உதவும் என்று சொன்னார்கள் ) தமிழ்தேசிய சிந்தனையில் ஈர்க்கபட்டு சிவன் மட்டுமே முதற்கடவுள் என்றும், முருகன் மட்டுமே தமிழ் கடவுள் என்றும் நம்பிய காரணத்தால் கண்ணனை மறந்தே போனேன்!!
எந்த உருவ வழிபாட்டிலும் அதிக நாட்டம் இல்லாது அகம் நோக்கிய அறிதலில் ஆர்வம் கொண்டிருந்தேன்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் கண்ணனை பற்றிய விளக்க நூலில் ஓசோ சொன்ன கருத்துக்களை அசைபோட்டு அதில் கிடைத்த தெளிவும்! எம் கண்ணனின் ஈர்ப்பும்!! அவன் உணர்த்திய ஏதோ ஒன்றும் என்னை மேலும் அறிந்து கொள்ள ஊக்கம் கொடுத்தவை. வரலாறுகள் பல தேடவும் அறிந்து கொளவும் காரணமாகியது எம் கண்ணனே!!
நாமத்தில் இரு பாதங்கள் ஏன்? சங்கு சக்கரம் எதற்காக? இதன் பொருள் என்ன?
நாமத்தில் முக்கோடுகள் ஏன்? அதன் பொருள் என்ன?
அர்த்தமற்று ஏதும் இல்லை!!
ஏன் எவரும் தெளிவாக விளக்குவது இல்லை என்ற கேள்விகளுக்கு
தம்பி பிரபாகர் அவர்கள் கொடுத்த விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது இதுவரை நான் அறிந்திராததை அழகாக விளக்கினார்.
பாதம் கால் என்பது சுவாச கலையை குறிக்கும் சொற்கள்.
இடது பாதம் சந்திர கலை, வலது பாதம் சூரிய கலை
நடுவில் உள்ளது தாரகை கலை அல்லது அக்னி கலை என்பர்
சூரிய சந்திர அக்னி இம்மூன்று தீயும் இணைந்த நிலை முத்தீ என்றும் அகத்தீ என்றும் கூறுவர்.
சுழுமுனையில் காணும் ஒளி தரிசனம் நற்காட்சி எனும் சுதர்சன சக்கரமாகவும்
அப்போது கேட்கும் ஒலி நாதம் சங்காகவும் இது நல்ஞானம் அதன் அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது.
கண்ணனில் தகப்பனார் வாசு தேவன்
கடலை கடைய பயன்பட்டது வாசுகி பாம்பு
யோக கலையை சைவம் மட்டுமே கொண்டு இருக்கவில்லை!!
மெய்ஞானம் என்பது வைணவத்திலும் உண்டு.
தேவ அசுரர் இணைந்து கடைந்த கடல், பெற்ற அமிர்த்தம் இவை அனைத்தும் யோக கலை நுட்பங்களை விவரிக்க எழுந்தவையே!!
ஆமை 🐢 - புலனடக்கம்
வாசுகி பாம்பு 🐍 - சுவாசம்
தேவ அசுரர் - இடகலை பிங்கலை
மந்தர மலை - சுழுமுனை
இப்படி தான் யோகம் வைணவத்தில் பரி பாசை கதையாக விளக்கப்படுகிறது.
பகவத் கீதையில் கூட வாசி யோகத்தை கண்ணன் போதிக்கிறார்.
இறுதியாக எளியவர்களுக்கு பக்தி யோகமே போதுமானது என்றார்.
வைணவம் எனில் பக்தி மட்டுமே என அதையே பிடித்துக் கொண்டனர் எல்லோரும் தற்காலத்தில்.
ஜீவ சமாதி நிலையை அடைந்த வைணவர்கள் பலர். ராகவேந்திரர் மிகச் சிறந்த உதாரணம்.
என்று நெடியதொரு விளக்கம் கொடுத்த
அன்புதம்பி பிரபாகரன் அவர்களில் விளக்கத்திற்கு பின்னர் முதல் முறையாக தீபாவளி படையலை
திருநாமம் இட்டுகொண்டு படைத்தேன். அகம் மகிழ்ந்தேன்.
அறிதலும், புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க நிலைப்பாடும் மாறும் என முன்னோர் சொன்ன வழியை பின்பற்றி தேடலை தொடருகிறேன்.
கிருஷ்ணானந்தம்.
Comments
Post a Comment